குளிர்கால குழந்தை பாதுகாப்பு முறைகள் !

அப்பாடா!  வெயில் காலம் முடிஞ்சது... ஒருவழியா கோடை கால நோய்கள்லேருந்து குழந்தைகளை காப்பாற்றியாச்சு’ என்று நிம்மதி மூச்சு விடுவதற்குள்ளேயே அடுத்து மழைக்காலம், குளிர்காலம் என்று வரிசை கட்டி நிற்கின்றன.ஸ்கூல் விட்டு வரும்போதே ‘ஹச்... தொண்டையிலே கீச் கீச்...’ என்று மூக்கையும் கண்ணையும் கசக்கிக்கொண்டு வருவார்கள்.

குளிர்காலத்தில் பரவும் வைரஸ்கள் பெரியவர்களையே படுத்தும் போது, குழந்தைகளை விட்டு வைக்குமா? குளிர்காலம் ஆரம்பிக்கப்போகும் சூழ்நிலையில் எந்த விதமான வைரஸ்களால் குழந்தைகளுக்கு என்னென்ன நோய்கள் வரும்? அவற்றின்அறிகுறிகள்? விளைவு கள்? தடுக்கும் முறைகள்? விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் தீபா ஹரிஹரன்.

“குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்கள் அதிகமாக பரவும். வைரஸ் தொற்று ஏற்பட்டு, தொண்டை வலி உண்டாகும். தொண்டை வலியால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். சில அம்மாக்கள் வலுக்கட்டாயமாக குழந்தையை மடியில் வைத்து ஊட்டுவார்கள்.

இது தவறு. இதனால் தொண்டையில் இருக்கும் வைரஸ் தொற்று காதுக்கும் பரவி சீழ் வடியும் அளவுக்கு கடுமையாகக்கூடும். 6 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு சளி, காய்ச்சலோடு இளைப்பும் (Wheezing) அதிகமாக இருக்கும். இந்தக் குழந்தைகளுக்கு  நெபுலைசர் தெரபி கொடுத்து சுவாசப் பிரச்னைகளை சரி செய்வோம்.

மழை மற்றும் குளிர் காலங்களில், பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரை HFMD (Hand, Foot and Mouth disease virus) எனப்படும் வைரஸ் தாக்கும் அபாயம் அதிகம். ஆரம்ப நிலை அறிகுறியாக கை கால்களில் தடிப்புகள் தோன்றி பின்னர் இருமல், தும்மல், காய்ச்சல் வரும்.

முதல் 3 நாட்களுக்கு வாய்ப்புண் இருக்கும். சரும மாற்றங்களைப் பார்த்து விட்டு அம்மை என நினைத்துக் கொண்டு  கை வைத்தியத்தை ஆரம்பிக்க வேண்டாம்.  குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்டி பிரச்னையை உறுதி செய்வது நல்லது. இதற்கு தடுப்பூசி எதுவும் கிடையாது. பாதிப்படைந்த குழந்தைகளும் தாய்மார்களும் சுத்தமாக இருந்தாலே, இந்த வைரஸ் நோயின் தாக்கத்தை குறைத்துவிடலாம்.

எளிதில் பரவக்கூடியது இந்த HFMD வகை வைரஸ். அதனால் இருமும் போதோ, தும்மும் போதோ பிறருக்கு பரவாதவாறு கைக்குட்டையை மூக்கில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். வெளியே போய் விட்டு வந்தாலோ, விளையாடி விட்டு வந்தாலோ குழந்தைகள் சுத்தமாக கை, கால்களை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சில பெற்றோர்  மழைக்காலங்களில் பழங்கள், கீரைகள் கொடுத்தால் சளி பிடிக்கும் எனத் தவிர்ப்பார்கள்.

இதனால் வைட்டமின் `சி’ பற்றாக்குறை ஏற்படும். இருமல், சளி விரைவில் குணமாக வைட்டமின் சி’ மிக முக்கியம்.  தயிர், மோரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ப்ரோபயோடிக்ஸ் உள்ளது. அதனால் அவற்றை  தாராளமாக கொடுக்கலாம்.  அதிக நேரம் ஏசி அறையிலேயே இருக்காமல், சூரிய ஒளி உடலில் படும் படி விளையாடச் செய்தால் வைட்டமின் டி’ பற்றாக்குறை வராது.

குழந்தைகளுக்கு போதுமான தூக்கமும் அவசியம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்கவும் வழி செய்யும். வயதுக்கு ஏற்ற தடுப்பூசிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட காலங்களில் போட வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் குளிர்கால வைரஸ்கள் குழந்தைகளை தாக்காமல் பாதுகாக்கலாம்...’’ - See more at: http://m.dinakaran.com/hdetail.asp?Nid=4033#sthash.cYcOm6eB.dpuf

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்